Saturday, May 18, 2013

கள்ளக் கத்திரி


கத்திரியின் காலமின்னும் கனியவில்லை என்று
கணக்கிட்டுக் கூறுவதில் இனி பலனில்லை போலும்!

நித்தம் கூடிவரும் கதிரவனின் கொதிவெப்பம்
நிர்ணயக் கணக்குகளை நிந்தித்தது போலும்!

விடிகாலை வெதுவெதுப்பில் விழிமலர்ந்த அக்கணம்
விடையொன்று உதித்தது பகலவன்போல் பளிச்சென்று!

கணக்கில் பிழையில்லை சரிதான் போலும் - இது
காமுற்றக் கதிரவனின் சதிதான் போலும்!

நிலமகளை நெருங்கி வரும் நியமந்தன்னை
நீட்டுவிக்க ஏங்கி இடும் நாடகம் போலும்!

கள்ளன் வெறும் கதிரவனா? இல்லை போலும்
கள்ளியாம் நிலமகளும் கூட்டணி போலும்!

திங்களுக்கு மும்முறை மேகம் கூட்டித்
தேம்பியவள் காக்கும் அமைதி சாட்சி போலும்!

Sunday, April 29, 2012

தனிமையின் துணையில்

ஓயாமல் ஓசையிடும் கடலலையின் கரையினிலே
காயாத கனியாத ஈர நினைவுடனே
துணையொன்று தானின்றி ஒருமையில் நின்றேன்
தேயாமல் நீ என்றும் துணை வருவாய் என்றே!

மென்தென்றல் தீண்டலால் கூடிட்ட குளிரோ - அன்றி என்
கண்கொட்டாப் பார்வையினால் தோன்றிட்ட நாணமோ
கருமேகச் சேலைகொண்டு கவின்முகம் மறைத்தாயே
கடைக்கோடிக் காதலனின் சிறுநெஞ்சைச் சிதைத்தாயே!

பக்கம் வர எண்ணமில்லை பார்வையது போதுமே
பரிதியவன் பார்வை பட்டால் இன்றிரவும் போகுமே
ஊனுருகி உயிருருகி உனை எண்ணித் தவிக்கின்றேன்
ஊடலைக் களைந்தென்னை உவகையில் ஆழ்த்தாயோ!

Saturday, October 8, 2011

அகரமுதல் அனுபவம்

ன்றாடம் பரிமாறும் பச்சரிசிச் சுடுசோறும்
வியில் அவித்தெடுத்த இலவம்பஞ் சிட்டிலியும்
ஞ்சி மிளகு தட்டிப்போட்ட இளஞ்சூட்டுப் பொங்கலும்
ஓட்டி இலையிட்ட இனிப்புக் கொழுக்கட்டையும்
ண்ண உண்ண சலிக்காத உப்புமா வகையறாக்களும்
றுகாய்கள் அணிவகுப்பில் உப்பிட்ட தயிர்சோறும்
ண்ணி எண்ணிப் பார்க்கையிலே என் அருமை நெஞ்சமே
க்கமே எஞ்சிடுதே சுவைக்கிங்கே பஞ்சமே!
ந்தின்பால் இரண்டேற்றி அத்திப்போல் பூத்த அந்த
ரு வார விடுமுறை உயிர்ப்பித்த தென்நாவை!
ய்வெடுத்து ஓய்ந்துபோய் சிந்தித்த வேளையில்
வை அன்று பாடிச்சென்ற பசிப்பிணிப் பாடல்
து அழகாக விளக்கிற்றே சாண்வயிரின் நாடல்!